வடமதுரை: வடமதுரை அருகே கிராம மக்கள் சலகருது எனப்படும் சுவாமி மாடுகளை வீடுகளுக்குள் அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
வடமதுரை கன்னிமார்பாளையத்தில் வசிக்கும் ராஜகம்பளத்தார் சலகருது எனப்படும் சுவாமி மாடுகளை வளர்க்கின்றனர். இவ்வகை காளை மாடுகளே பெரியகும்பிடு என நடக்கும் குலதெய்வ வழிபாட்டு திருவிழாக்களில் நடக்கும் ஓட்ட பந்தயங்களில் பங்கேற்கும். அதோடு தை மாதத்தில் சலகருது மாடுகளை இப்பகுதி கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்கின்றனர். நேற்று கன்னிமார்பாளையம் பெரியதனக்காரர் வல்லகொண்டம நாயக்கர் தலைமையில் சலகருது மாடுகள் தொட்டயகவுண்டனூர், நாடுகண்டனூர், அத்திகுளத்துப்பட்டி, கன்னிமார்பாளையம் கிராமங்களுக்கு அழைத்து செல்லப்பட்டன. அங்குள்ள வீடுகளுக்குள் மாடுகளை அழைத்து சென்று சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையால் குடும்பத்தில் நோய் பாதிப்பு இருக்காது, செல்வம் பெருகும், ஊர் நலமுடன் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.