பதிவு செய்த நாள்
27
ஜன
2022
03:01
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விமர்சையாக துவங்கியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, தருமபுரம் 276வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆசியுடன், வரும் 6ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள் சன்னதிகள், ஐந்து கொடிமரங்கள், ஐந்து தேர்கள், பிரதான கோபுரங்கள், பிரகாரங்கள், தரைத்தளம், நவீன மின்சாதனங்கள் பொறுத்தம் உள்ளிட்ட அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலிக்கின்றன. அதைத் தொடர்ந்து, விருத்தகிரீஸ்வரர் சுவாமியிடம் உத்தரவு பெறும் நிகழ்வாக, இன்று (27 ம்தேதி) காலை அனுக்ஞை பூஜை நடந்தது.
பெரியநாயகர் சன்னதியில் காலை 9:00 மணிக்கு மேல், பஞ்சமூர்த்திகளை வேண்டி, அனுக்ஞை நடந்தது. தொடர்ந்து, கோவில் சிவாச்சாரியார்கள் இணைந்து புனிதநீர் கலசங்கள் வைத்து, சிறப்பு வேள்வி பூஜை செய்தனர். பின்னர், விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துராஜா, கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர் சந்த், வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்காக, தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, வெப்பநிலை பரிசோதனை செய்து, முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.