பதிவு செய்த நாள்
27
ஜன
2022
03:01
கூடலுார்: கூடலுார் அருகே, 80 வயது மூதாட்டி, தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம், தான் சேமித்த, 20 ஆயிரம் ரூபாயை விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கி உள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் சூண்டி பகுதியில், புஷ்பம்மாள், 80, என்பவர் வசித்து வருகிறார். ஆதரவற்ற அவரது உணவு தேவையை, அப்பகுதி மக்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்.இறை நம்பிக்கை உள்ள அவர், தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தை, சூண்டி விநாயகர் கோவிலுக்கு தானமாக வழங்கினார். தற்போது, முதியோர் ஓய்வூதியத்தில் இருந்து சேமித்த, 20 ஆயிரம் ரூபாயை, விநாயகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக வழங்கி, கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். புஷ்பம்மாள் கூறுகையில், ஆதரவற்ற எனக்கு, எல்லா வகையிலும் துணை நிற்கும் இறைவன் விநாயகனுக்கு, என்னால் முடிந்த காணிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால், எல்லாருக்கும் நல்லதே நடக்கும், என்றார்.
கோவில் கமிட்டி தலைவர் பாஸ்கரன் கூறுகையில், பெரிய மனசுள்ள மூதாட்டி தன்னிடம் இருப்பதை எல்லாம் இறைவனுக்கு வழங்கி வருகிறார். இறைவன் அவருக்கு துணை இருக்கிறார். கடந்த ஆண்டு, வழி தவறி வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போன அவரை, அப்பகுதி இளைஞர்கள் ஐந்து நாட்கள் தேடி கண்டுபிடித்து மீட்டனர். இறைவன் அருளால், ஆரோக்கியத்துடன் இருந்தார். கிராம மக்கள் அவருக்கு என்றும் ஆதரவாக இருப்பர், என்றார்.