பதிவு செய்த நாள்
03
பிப்
2022
06:02
தஞ்சாவூர்: சுவாமி விவேகானந்தர், தஞ்சாவூர் வந்து, 125வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு கல்வெட்டு திறக்கப்பட்டது.
கடந்த 1897ம் ஆண்டு, அமெரிக்க சிகாகோ நகரில், இந்திய நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்தை உலகறியச் செய்து, வீர உரையாற்றிய சுவாமி விவேகானந்தர், ராமேஸ்வரம் வழியாக தாயகம் திரும்பினார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலம் புறப்பட்ட, பிப்.3ம் தேதி தஞ்சாவூர் வந்தடைந்தார். அவரை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர். அங்கு ஆசி வழங்கி விட்டு உரையாற்றினார். பின்னர், அங்கிருந்து கும்பகோணத்துக்கு சென்று, மூன்று நாட்கள் தங்கி பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார்.
தஞ்சாவூரில் ரயில்வே ஸ்டேஷனில், சுவாமி விவேகானந்தர் விஜயம் செய்து, 125 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில், அது தொடர்பான பட்டயம், விவேகானந்தரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டது. அந்த கல்வெட்டை திருச்சி ரயில்வே கோட்டம் உதவி வணிக மேலாளர் சந்திரசேகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து புஷ்பாஞ்சலியுடன் ஆரத்தி நடந்தது. ஓய்வுபெற்ற பேராசிரியை இந்திரா தொடக்க உரையாற்றினார். ஜெயக்குமார் வீரமொழி வாசித்தார். தொடர்ந்து அன்னை சாரதாதேவி, ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரின் உருவ படங்களுக்கு மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜிதமானசந்தா மகராஜ், தஞ்சாவூர் ரயில் நிலைய மேலாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க துணைத் தலைவர் கிரி, பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் சரவணன், கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.