பதிவு செய்த நாள்
04
பிப்
2022
10:02
மயிலாடுதுறை: திருநாங்கூர் திவ்ய தேச கோவிலில் நடைபெற்ற 11 தங்க கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை சேவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திருத்தலங்களில் நாங்கூர் மணிமாடக் கோவில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரிமேய விண்ணகரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன் அரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வன்புருஷோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுண்ட நாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீ மாதவ பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருக்காவளம்பாடி கோபாலன் ஆகிய 11 திவ்ய தேச கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் உலகப் பிரசித்தி பெற்ற 11 கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு கருடசேவை உற்சவம் நேற்று அதிகாலை நடை பெற்றது.
கருட சேவையை முன்னிட்டு நேற்று முன்தினம் திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கும் சென்று கருட சேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் தங்களது கோவிலில் இருந்து புறப்பட்டு நாங்கூர் மணிமாடக் கோவிலில் நேற்று மாலை வந்தனர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோவில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அதிகாலை 12:30 மணிக்கு மணிமாட கோவின் ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுனிகளும், ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி தாயாருடன், திருமங்கையாழ்வாரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருள அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு, தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கையாழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து 12:45 மணிக்கு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். விழாவை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக், மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.