பதிவு செய்த நாள்
08
பிப்
2022
03:02
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், வரும் 17ம் தேதி, நடைபெறும் மாசிமக விழாவிற்காக, ஆறு சிவாலயங்களில் கொடியேற்றம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மாசிமக திருவிழா, வரும் 17 ம் தேதி நடக்கிறது. இதற்காக, ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய, ஆறு சிவலாயங்களில் நேற்று இரவு பூர்வாங்க பூஜை செய்யப்பட்டு, இன்று (08ம் தேதி ) காலை, கொடியேற்றம் நடைபெற்றது. மாசி மகத்திற்கு முதன்மையாக விளங்கும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க, 10 நாள் உற்சவ விழாக்கு கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து இரவு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் இந்திர விமானத்தில் வீதியுலா, 11ம் தேதி 63 நாயன்மார்கள் வீதியுலா, 12ம் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 15ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதை போல 16ம் தேதி அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் ஆகிய 4 கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 17ம் தேதி, மகாமகம் குளத்தில், மதியம் 12:00 மணிக்கு மேல், 1:00 மணிக்குள், மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது. 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.
வைணவ தலங்களில் கொடியேற்றம்: மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், 10 நாள் உற்சவம், நாளை (9ம் தேதி) காலை, கொடியேற்றப்படுகிறது. வரும் 12ம் தேதி கருட வாகனங்களில் ஓலைச்சப்பரமும், பிப்.17ம் தேதி சக்கரபாணி கோவில் தேரோட்டமும், சாரங்கபாணி பெருமாள் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.