பதிவு செய்த நாள்
26
பிப்
2022
11:02
சென்னை, : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று, காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி கருட சேவை உற்சவம் நடந்தது. 23ம் தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. 24ம் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது.ஆறாம் நாள் விழாவான நேற்று, காலை 5:15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு, யானை வாகன புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நாளை காலை 6:30 மணிக்கு, வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், இரவு குதிரை வாகன சேவையும் நடக்கிறது. 28ம் தேதி பகல் 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.