நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா: மார்ச் 7ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2022 05:03
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பூக்குழி பெருந்திருவிழா வருகிற மார்ச் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நத்தம் மாரியம்மன் கோவில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மாசிப் பூக்குழி பெருந்திருவிழா வருகிற மார்ச் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து 8ஆம் தேதி உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கருப்புசாமி கோவில் வந்து சேருவர். பின்னர் காலை அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருப்பர். அன்றையதினம் இரவு அம்மன் குளத்திலிருந்து நகர் வளமாக கம்பம் எடுத்துவரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். 11ஆம் தேதி மயில் வாகனத்திலும், 15ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 18 ஆம் தேதி அன்ன வாகனத்தி மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்து அங்குள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 22ஆம் தேதி அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் கழுகு மரம் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மாலையில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. 23ஆம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா உடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருகோவில் பூசாரிகள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.