பதிவு செய்த நாள்
02
மார்
2022
10:03
மதுரை : மதுரை, மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நேற்று (1ம் தேதி) மாலை 6.00 மணிக்கு யாகசாலை பூஜையுடன் துவங்கி வழிபாடு நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. அருள்மிகு சங்கர லிங்கம் சுவாமிக்கும், அருள்மிகு கோமதி அம்பிகைக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள், முதல் கால பூஜை 9.00 மணிக்கும், இராண்டாம் கால பூஜை நள்ளிரவு 12.00 மணி, மூன்றாம் கால பூஜை அதிகாலை 2.00 மணிக்கும் நான்காம் கால பூஜை காலை 5.00 மணிக்கும் நடைபெற்றது. பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், பாயசம், எள் அன்னம், புளியோதரை அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.