பதிவு செய்த நாள்
06
மார்
2022
05:03
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய் மற்றும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில், ஏராளமான பக்தர்கள், மருதமலை கோவிலுக்கு வருவது வழக்கம். விடுமுறை தினமான நேற்று, வழக்கம்போல, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் சுவாமியை தரிசிக்க வந்தனர். சுப்பிரமணிய சுவாமி நேற்று வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வழக்கமாக, விடுமுறை தினம் மற்றும் விசேஷ தினங்களில், மருதமலை கோவிலுக்கு செல்லும் வாகனங்கள், சட்ட கல்லூரியில் இருந்து அன்னை இந்திரா நகர் வழியாக அனுப்பப்படும். இதனால், கோவிலிலிருந்து வெளியேறும் வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வெளிவந்தன. இந்நிலையில், நேற்று, கோவிலுக்கு செல்லும் வாகனங்களும், கோவிலில் இருந்து வெளியேறும் வாகனங்களும் ஒரே சாலையை பயன்படுத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மருதமலை அடிவாரம் கேட் பகுதியில் இருந்து சட்டக்கல்லூரி வரை, வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசலால், சட்டக்கல்லூரியில் இருந்து மருதமலை அடிவாரம் செல்ல, சுமார், 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.