பதிவு செய்த நாள்
06
மார்
2022
05:03
தாவணகரே:கடவுளின் அருளுக்கு பாத்திரமான நாம், எந்த விதமான பிராணிகளையும் இம்சிக்கக்கூடாது, என தாவணகரே மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாவணகரேயின், வரலாற்று பிரசித்தி பெற்ற துர்காம்பிகை கோவில் திருவிழா நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் பற்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆலோசனை நடந்தது. இதில் கோவில் தர்மகர்த்தா, உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.மாவட்ட கலெக்டர் மஹாந்தேஷ் பீளகி பேசியதாவது:தாவணகரே நகரின் துர்காம்பிகை கோவில் திருவிழா வரும் 13 முதல் 16 வரை நடக்கவுள்ளது. இதில் எந்த பிராணிகளையும் பலியிடக்கூடாது.
பிராணி வதை மகாபாவம் என நாம் நம்புகிறோம். கடவுள், பக்தியை விரும்புகிறாரே தவிர, இம்சையை அல்ல.நம் சட்டமும் கூட, இதையே கூறுகிறது. எனவே நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பிராணி வதையை தவிர்க்க வேண்டும். பிராணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல், சிரிஞ்ச் மூலம் எருமை மாட்டின் ரத்தத்தை எடுத்து துர்காம்பிகைக்கு சமர்ப்பித்து திருவிழா கொண்டாடலாம். சட்ட ரீதியில் தடை செய்யப்பட்ட கடுமையான வழிபாடுகளை பின்பற்றக்கூடாது. இதுபற்றி புகார் வந்தால் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா விதிமுறைகளை, பின்பற்றுவது கட்டாயம். திருவிழாவை வெற்றிகரமாக நடத்த, அனைத்து துறைகளும் அவரவர் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்க வேண்டும்.
கோவில் வளாகத்தில் உருள் சேவை உட்பட மற்ற சேவைகளுக்கு மாநகராட்சி சார்பில், தேவையான வசதிகளை செய்ய வேண்டும்.போஸ்டர் வைப்பதற்கு தடை திருவிழா நடக்கும் ஏழு நாட்களும் தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும். தாவணகரே நகரின் 45 வார்டுகளும் துாய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டிக் பேனர், போஸ்டர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட போலீஸ் எஸ்.பி., ரிஷ்யந்த் பேசியதாவது:துர்காம்பிகை கோவில் திருவிழாவை நல்லமுறையில் நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கேங்கே குப்பை கூடைகள் வைத்து, துாய்மையை காப்பாற்ற வேண்டும். பக்தர்களுக்கு வசதியாக தகவல் பலகைகள் பொருத்த வேண்டும். பிராணிகளை பலியிடுவது, சட்டப்படி குற்றமாகும். ஒருவேளை பிராணி பலியிட்டது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நகர் முழுவதும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேப்பிலை ஆடை கட்டுவது, தேவதாசி போன்ற மூட நம்பிக்கை வழிபாடுகளில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.