மீண்டும் களை கட்டத் துவங்கிய புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 03:03
மானாமதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளில் புரவி எடுப்பு திருவிழாக்கள் மீண்டும் களை கட்ட துவங்கியதையடுத்து மானாமதுரையில் புரவிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களில் நல்ல மழை பெய்ய வேண்டியும்,கிராம நன்மைக்காகவும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள காவல் தெய்வங்களுக்கு புரவி எடுப்பு என்னும் குதிரை எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து திருவிழாக்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கிராமப்பகுதிகளில் மீண்டும் புரவி எடுப்பு திருவிழா களைகட்ட துவங்கியுள்ளது.இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் புரவி எடுப்பு திருவிழாவிற்காக மானாமதுரையில் உள்ள மண்பாண்ட கலைஞர்களிடம் புரவிகள் செய்வதற்கு கிராம மக்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதையடுத்து தொழிலாளிகள் பாண்டி சந்துரு உட்பட பலர் கலைநயமிக்க புரவிகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளி பாண்டி கூறுகையில்,கடந்த 2 வருடமாக புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடம் மீண்டும் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெற ஆரம்பித்துள்ளதையடுத்து மானாமதுரை, சுந்தரநடப்பு ஆகிய பகுதிகளில் புரவிகள், காளை மாடுகள்,சுவாமி உருவங்கள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.