பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
10:07
மேட்டூர்: தட்சிணாயன புண்ய காலம் துவக்க நாளான நேற்று, மேட்டூரில் ஏராளமான பக்தர்கள் நீராடி, காவிரி அன்னையை வழிபாடு செய்தனர். ஆண்டில், தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதம், உத்ராயண காலம்; ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதம், தட்சிணாயன காலம் என பிரிக்கப்பட்டுள்ளது. கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, காவிரி ஆகிய ஏழு நதிகளையும், சப்த புண்ணிய நதிகளாக, இந்துக்கள் கருதினர்.
காவிரியின் பெருமை: புண்ணிய நதிகளில் நீராடி இறைவனை வழிபாட்டால், பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. தென்மேற்கு பருவமழையால், காவிரியில் மட்டும், தட்சிணாயன காலம் துவங்கும் ஆடி மாதத்தில், வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனால், தட்சிணாயன புண்ய நதி என்ற பெருமை, காவிரிக்கு மட்டுமே உண்டு. எனவே, தட்சிணாயன புண்ய காலம் துவங்கும் நாளில், மக்கள், காவிரியில் புனித நீராடி, சூரியனையும், குல தெய்வங்களையும், வழிபாடு செய்கின்றனர். தட்சிணாயன காலம் துவங்கும் ஆடி மாதம் 1 தேதி தான், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே, பாரதப் போர் துவங்கியது. தொடர்ந்து, 18 நாள் நடந்த போர், ஆடி 18ல், முடிவுக்கு வந்தது. போரில் வென்ற பாண்டவர்கள், தாங்கள் பயன்படுத்திய, வாள், வேல், வில், அம்பு போன்ற ஆயுதங்களை, காவிரியில் சுத்தம் செய்து, மனித உயிர்களை பலி வாங்கிய பாவத்தைப் போக்கினர்.
ஆடி 1ல் புனித நீராடி...: இதனால், ஆடி 18 அன்று, காவிரிக் கரையோர மக்கள், தங்கள் குலதெய்வங்களின், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை காவிரியில் சுத்தம் செய்து, காவல் தெய்வங்களுக்கு விழா எடுப்பர். ஆடி 1ம் தேதி, கரையோர மக்கள், புதுமண தம்பதியர், தட்சிணாயன புண்ய காலத்தில், இறைவன் அருள் கிடைக்க, காவிரியில் புனித நீராடுவர். நேற்று மேட்டூர் காவிரியாற்றில், ஏராளமான பக்தர்களும், புதுமண தம்பதியரும், புனித நீராடி வழிபாடு செய்தனர். பருவமழை தாமதமாகி, விவசாயம் பாதிக்கப்பட்டதால், வழக்கத்தை விட, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறந்ததால், ஆடி, 1ம் தேதி, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நடப்பாண்டு நீர் திறக்காததால், சேலம் மாவட்டம், மேட்டூர் தவிர, இதர, 10 மாவட்டங்களில், காவிரியில் தண்ணீர் குறைவாக ஓடியது.