பதிவு செய்த நாள்
16
மார்
2022
08:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடையை நீக்கி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 2020 மார்ச் முதல், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடையை நீக்கி, மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலையில், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி, இம்மாதம் (பங்குனி) பவுர்ணமி நாட்களான, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய, 17, 18ம் தேதிகளில் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றியும், கட்டாயம் முக கவசம் அணிந்தும் வர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.