பதிவு செய்த நாள்
16
மார்
2022
10:03
மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் பங்குனி மாத, வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, நந்தியம் பெருமாளுக்கும், சங்கரலிங்கம் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. இன்றைய இறைப் பணியில் கோயம்புத்தூர், சிவ. சி.வி.பி.குமார் - சிவ. டாக்டர். சித்ரா ராஜலக்ஷ்மி குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் புராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு வெண் பொங்கல், அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.