பதிவு செய்த நாள்
16
மார்
2022
08:03
தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமிகோவிலில் ராகு பெயர்ச்சி வரும் 21ம் தேதி நடைபெறும் நிலையில், இன்று (16ம் தேதி) லட்சார்ச்சனை துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகுபகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப் பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. அதன்படி வரும் மார்ச் 21ம் தேதி பிற்பகல் 3:13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி வரும் 19ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து 20ம் தேதி இருகால யாகசாலை பூஜைகளும், 21ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2:30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3:13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாரதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது
லட்சார்ச்சனை: ராகு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை துவங்கியது. தொடர்ந்து வரும் 18ம் தேதி வரையும், பின்னர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம். 19ம் தேதி முதல் மாலை நேரத்தில் தேவார இன்னிசை, பரதநாட்டியும், நாத சங்கமம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.