பதிவு செய்த நாள்
17
மார்
2022
09:03
மைசூரு:தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா பஞ்ச மஹாரதோற்சவம் எனப்படும் ரத உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா ரத உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடந்து வந்தது.இந்த ரத உற்சவத்தை காண, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத உற்சவம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால், மீண்டும் ரத உற்சவத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இதையடுத்து, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு பஞ்ச மஹோற்சவத்தை மைசூரு மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி உடையார் துவக்கி வைத்தார். ஸ்ரீகண்டேஸ்வரா, பார்வதி, விநாயகர், சுப்ரமண்யா, சண்டிகேஸ்வரா ரதங்கள் கோவிலை சுற்றி பவனி வந்தன. கொரோனா தொற்று குறைந்திருந்தாலும், முன்னெச்சரிக்கையாக, திருவிழாவை நடத்த பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் விதித்திருந்தது.ஆயினும், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பஞ்ச ரத உற்சவம் நடப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து, சுவாமியை தரிசித்தனர்.