பதிவு செய்த நாள்
19
மார்
2022
09:03
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை குருலிங்க சங்கம பாத யாத்திரையை தொடங்கினார்.
அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மார்ச் 27-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவுக்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பூஜாமூர்த்தியாகிய சொக்கநாதப் பெருமானுடன் குருலிங்க சங்கம பாத யாத்திரையாக சென்று பங்கேற்கிறார். பாத யாத்திரையையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை தருமபுரம் ஆதீனத் திருமடம் ஸ்ரீசொக்கநாதர் பூஜை மடத்தில் 27-வது குருமகா சந்நிதானம் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். தொடர்ந்து, ஸ்ரீசொக்கநாத பெருமானை தலையில் சுமந்து, திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் கைத்துணையோடு, திருக்கூட்டத்து அடியவர்கள் புடைசூழ, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, சிவனடியார்கள் திருமந்திரம் ஓத, கயிலை வாத்தியங்கள் முழங்க, யானை, குதிரைகள் முன்செல்ல குருலிங்க சங்கம பாத யாத்திரையாக புறப்பட்டார். நிகழ்ச்சியில், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனத் தொடக்கப்பள்ளி செயலர் சௌந்தரராஜன், தருமபுரம் ஆதீன தேவாரப்பாடசாலை நிர்வாக இயக்குநர் தணிக்கையாளர் குரு.சம்பத்குமார், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் மணி, தருமபுரம் ஆதீனக்கல்லூரிச் செயலர் செல்வநாயகம், வர்த்த சங்க பிரமுகர்கள் செந்தில்வேல், பாண்டுரெங்கன், சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். யாத்திரையின்போது, ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு ஏவிசி கல்விக்குழுமம் சார்பில் குருமகா சந்நிதானத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு, குருமகா சந்நிதானத்துக்கு தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.