திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2022 10:03
மயிலாடுதுறை : திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்து கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது அதனைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பல்வேறு ஆதீனங்கள் உள்ளிட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இதற்கான கோவிலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வரும் நிலையில் இன்று கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தருமபுரம் ஆதீன கட்டளை தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் எடுத்துரைத்தார். ஆய்வின் போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவகுமார் இந்து சமய அறநிலையத் துறை தீயணைப்புத் துறை காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 2 மணிநேரம் ஆய்வு செய்த கலெக்டர் தொடர்ந்து அலுவலகத்திற்குச் சென்று முன்னேற்பாடுகள் குறித்து வருவாய், ஊராட்சி, சுகாதாரம், இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.