பதிவு செய்த நாள்
21
மார்
2022
03:03
தஞ்சாவூர்: ராகு தோஷ பரிகாரத் தலமாக விளங்கும், திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், தரிசனம் செய்ததால், நகரமே திக்குமுக்காடியது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில், ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக, கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சுசீல முனிவரின் குழந்தையை, அரவமாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபம் நிவர்த்தி பெற, நான்கு தலங்களில் வழிபட்டு, நிறைவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகாசிவராத்திரி அன்று வழிபட்டு, சாபம் நீங்கப்பெற்றார். நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். ராகுபகவான் ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப் பெயர்ச்சி நடைபெறுகிறது.
அதன்படி இன்று ( 21-ம் தேதி) பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி நேற்று (20ம் தேதி) இருகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு புனித நீர் அடங்கிய கடங்கள், மங்கள வாத்தியத்தோடு புறப்பட்டு, சன்னிதியை அடைந்தன. தொடர்ந்து, பால், மஞ்சள், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால், ராகு பகவானுக்கும், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னி ஆகியவற்றைக்கு அபிஷகேம் செய்யப்பட்டது. தொடர்ந்து 3:13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. மாலை ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யவும், ராகுபகாவனை தரிசனம் செய்யவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், திருநாகேஸ்வர நகரமே திக்குமுக்காடியது.