பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
01:04
திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில், இன்று தேரோட்டம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில், நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் நடைபெறும்.
கடந்த மாதம் 11ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி இந்த ஆண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா, ஏப்ரல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த 28ம் தேதி, எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் புறப்பாடும், திரு வீதி உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது. அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 4.30 மணியளவில் உற்சவ மூர்த்திகள், தனித்தனியே இரண்டு தேர்களில் எழுந்தருளினர். காலை 5 மணியளவில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர்கள் வலம் வந்து நிலை சேர்ந்த பின், பிரதான தேர்கள் வடம்பிடிக்கப்ட்டது. காலை 6.30 மணியளவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி மற்றும் அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. மேலும் உள்ளூர் வியாபாரிகள் தண்ணீர்பந்தல், அன்னதானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாநகர போலீஸ் சார்பில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள் செய்து இருந்தனர்.