பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
01:04
சென்னை : உகாதி பண்டிகை முன்னிட்டு தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் சகித ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
யுகத்தின் ஆரம்பத்தை உகாதி என தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திருப்பதி திருமலை கோவில் உற்சவம் அனைத்தும் உகாதி யிலிருந்து தொடங்குவது வழக்கம். அதேபோல, சென்னை, தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில், உகாதி ஆஸ்தானம் என்னும் வழிபாடும் இன்று ஆரம்பமானது. இதற்காக இன்று காலை, ஆராதனை, வஸ்திர பிரதக்ஷனம், சமர்ப்பணம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரவனம் அரங்கில் பஞ்சாங்கம் படிக்கப்பட்டு பலன் கூறப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
சென்னை, புறநகரில் வசிக்கும் தெலுங்கு, கன்னட மக்கள் உகாதி பண்டிகையை கோலாகலமாக வரவேற்று கொண்டாடினர். உகாதி கொண்டாட்டம் பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாடப்படுகிறது. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும், அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது. மேலும், சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் முக்கியத்துவம் பெறுகிறது. உகாதி அன்று எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் துவங்குகிறது. இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது.