10 ஆண்டுகளுக்குப் பின் நடந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2022 05:04
நத்தம் : நத்தம் அருகே லிங்கவாடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பின் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு முன்னதாக கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி அழகர்மலையில் இருந்து புனித நீராடி, முத்தாரம்மன் கோவிலில் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைக்கப்பட்டது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி, அங்கப் பிரதட்சனம், அக்னிச்சட்டி எடுத்தல், கிடாய் வெட்டு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து இன்று மாலை முத்தாளம்மன் பக்தர்கள் வெள்ளத்தில் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இத்திருவிழா கடந்த 10 ஆண்டுகளுக்கும் பின் நடப்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை லிங்கவாடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.