பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
11:07
மோகனூர்: வாழவந்தி செல்லாண்டியம்மன் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், செல்லாண்டியம்மன் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தூக்குத் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு, அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வைக்கப்பட்டது.தொடர்ந்து, காலை 10 மணிக்கு எல்லை உடைக்கம் நிகழ்ச்சி நடந்தது. அதில், அம்மனுக்கு வெட்டப்படும் ஆட்டு ரத்தத்தை பாத்திரத்தில் பிடித்து, எல்லைக்கு கொண்டு சென்று, பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து ஆலமரத்தின் மீது வீசி வந்தனர்.அதையடுத்து, நேற்று முன்தினம் காலை 8 ம ணிக்கு, ஊமைப்புலி குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோவில் முன் நின்றிருந்த ஆட்டின் வயிற்றை கத்தியால் கீறி கல்லீரலை எடுத்து, பூசாரி வாயில் கவ்வியபடி எடுத்துச் சென்று கிணற்றில் விட்டு வந்தார். மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தூக்குத்தேரில் ஸ்வாமி எழுந்தருளினார். பக்தர்கள் தேரை, 18 கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றனர்.அங்கு, பக்தர்கள் மாவிளக்கு வைத்து பூஜை செய்து ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.