பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
11:07
நாமக்கல்: சேந்தமங்கலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், 13வது ஆடிப்பூர விழா, ஜூலை 29ம் தேதி நடக்கிறது.உலக சமாதானம், அமைதி, மத நல்லிணக்கம் பெறவும், பருவமழை வேண்டியும், பெண் குழந்தை சிசுவதை செய்வதை தடுக்கவும், மகளிர் மேம்பாடு அடையவும், மக்கள் நலம் பெறவும், ஆடிப்பூர விழா நடக்கிறது. ஜூலை 29 காலை 9 மணிக்கு பெண்கள் கஞ்சிக்கலயம், முளைப்பாரி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக செல்கின்றனர்.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட நிர்வாக்குழு தலைவர் கணேசன் தலைமை வகிக்கிறார். இணைச் செயலாளர் அங்கமுத்து முன்னிலை வகிக்கிறார். சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து சேர்மன் ரவி, ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் துவங்கும் கஞ்சிக்கலய ஊர்வலம், மேற்கு கடைவீதி, மெயின் ரோடு, பெருமாள் கோவில் தெரு, வளையல்காரத்தெரு மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைகிறது.தொடர்ந்து, காலை 11 மணிக்கு அன்னைக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனையும் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, சித்தர் சக்தி பீட நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.