பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம் நேற்று, அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, காலை 6.30 மணி அளவில், உண்ணாமுலையம்மன் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரம் முன், பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, மேளதாளத்துடன் காலை 6.50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது, பக்தர்கள், "அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, மாலை பெரிய நந்தி அருகே உள்ள வளைகாப்பு மண்டபத்தில், பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு அம்மன் சன்னதி முன், தீமிதி விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் காலையிலும், இரவிலும், மேளதாளம் முழங்க, பராசக்தி அம்மன் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.