பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூரத் திருவிழா, கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலசத்தில் கஞ்சி எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில், ஆடிப்பூர விழா, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு துவங்கியது. ஆதிபராசக்தி அம்மன் சுயம்புவிற்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை 3.35 மணிக்கு, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை 5 மணிக்கு, கருவறை மற்றும் புற்று மண்டபம் முன் அமைக்கப்பட்டிருந்த, யாக சாலையில் கலச விளக்கு வேள்வி பூஜையை, லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். சித்தர் பீடம் எதிரே உள்ள மைதானத்தில், அனைத்து பக்தர்களுக்கும் கஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, பால் அபிஷேகம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, பல்வேறு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். ஆடிப்பூரமான இன்று, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நாள் முழுவதும் பக்தர்கள் பால் அபிஷேகம் நடத்த அனுமதிக்கப்படும். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூர விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.