தஞ்சாவூர், கும்பகோணம் ராமசாமி திருக்கோவிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் "தென்னக அயோத்தி" என்று போற்றப்படும் ராமசாமி திருக்கோவிலில் ராம நவமி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாள் 3ம் தேதி வெள்ளி சூரிய பிரபையில் வீதி உலாவும், நான்காம் நாள் தங்க சேஷவாகனம், ஐந்தாம் நாள் சிறப்பு ஓலைசப்பரத்தில் வந்து சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து, ஆறாவது நாள் வெள்ளி ஹனுமன் வாகனம், ஏழாம் நாள் யானை வாகனம், எட்டாம் நாள் புன்னைமர வாகனம், ஒன்பதாம் நாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ராமர் மற்றும் சீதை தேரில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நாளை 11ம் தேதி திருமஞ்சனத்துடன் விடையாற்றி விழா நடைபெறுகிறது.