துமகூரு: கர்நாடக மாநிலம் துமகூருவில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம் துமகூரு குனிகல்லின் பிதனகரே பசவேஸ்வரா மடம் சார்பில் 161 அடி உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக பங்கேற்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் பங்கேற்க வில்லை. கர்நாடக முதல்வரும் பா.ஜ. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை பங்கேற்றார்.
அச்சிலையை திறந்து வைத்து முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: பஞ்சமுகி ஆஞ்சநேயர் என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனுமனின் சிறப்பு வடிவம். உலக நலனுக்காக அனுமன் இந்த வடிவத்தை எடுத்தார். அனுமனின் 161 அடி உயர சிலை கர்நாடகாவில் நிறுவப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம். இச்சிலையை சிற்பிகள் அற்புதமாகச் செய்திருக்கிறார்கள். இப்பகுதியில் ராம நவமிக்காக பல புனித பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நாட்களில் இப்பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை காணும். மாநிலத்திற்கும் நல்ல காலம் வர இருக்கிறது. என கூறினார்.