பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அன்னதானம் திட்டத்திற்கு, பக்தர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இங்கு, செப்டம்பர் மாதம் வரை அன்னதானத்திற்கு முன்பதிவு முடிந்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு முதல், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இக்கோவில் பிரார்த்தனை தலமாக உள்ளதால், கிருத்திகை, சஷ்டி, போன்ற விசேஷ நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திங்கள் கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை, தினமும் நூறு பேருக்கும், ஞாயிற்றுக் கிழமை, கிருத்திகை நாட்களில், வடை, பாயாசத்துடன் 200 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவிலில், நிரந்தரமாக பக்தர்கள் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்க, நிரந்தர வைப்புத் தொகையாக, 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ், 132 பேர், 19.80 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். தினசரி அன்னதான திட்டத்திற்கு, பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, ""விசேஷ நாட்களில், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. துலாபாரத்தில் கிடைக்கும் வாழை, மா, போன்ற பழங்களையும், அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களுக்கு வழங்குகிறோம், என்றனர்.