பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
ஊத்துக்கோட்டை: ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர். தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று பெரியபாளையம் பவானி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் விசேஷங்களில் ஆடி மாத விழா முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று துவங்கியது. திருவிழாவை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை மாலை முதல் இங்கு குவியத் துவங்கினர். குடும்பத்துடன் இங்கு தங்கி, நேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் நேற்று வேப்பஞ்சேலை அணிந்தும், உடல்களில் அலகு குத்தியும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக குடி நீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஆத்துப்பாக்கம், பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் செய்துள்ளது. விழாவையொட்டி, கோவில் வளாகம் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பெரியபாளையத்துக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.