பதிவு செய்த நாள்
12
ஏப்
2022
10:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. ரத்தினக்கற்கள் பதித்த ராயர் கிரீடம், செங்கோலுடன் மீனாட்சி அம்மன் மாசிவீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருகின்றனர். மதுரையை எட்டு மாதங்கள் சுவாமி ஆட்சி செய்வார். அதற்காக ஆவணியில் அவருக்கு பட்டாபிஷேகம் நடக்கும். அம்மன் நான்கு மாதங்கள் ஆட்சி செய்வார். அதற்காக இன்று வெகு விமரிசையாக நடந்தது.
அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் கொண்ட ராயர் கிரீடம் அம்மனுக்கு சாற்றப்பட்டு, பட்டாபிஷேகம் செய்து ரத்தினங்கள் இழைத்த செங்கோல் வழங்கப்பட்டது. அம்மனிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்ப்பித்தார்.
மதுரை அரசாளும் மீனாட்சி: பட்டாபிஷேகத்தை ஏற்ற மீனாட்சி அம்மன் மதுரை ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் என்பதும், சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாகவும் ஐதீகம். மீனாட்சி அம்மன் பட்டம் சூட்டியதை பறைசாற்றும் விதமாக அம்மன் பிரதிநிதியாக தக்கார் கருமுத்து கண்ணன், அம்மனிடம் இருந்து செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து செங்கோலை மீண்டும் அம்மனிடம் வழங்கினார்.வெள்ளி சிம்மாசன வாகனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி நேற்றிரவு மாசிவீதிகளில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை அஷ்டதிக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெறும் திக்விஜயம் நடக்கிறது. ஏப்., 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் திருக்கல்யாணமும், ஏப்.,15 தேரோட்டமும் நடக்கிறது.