குத்தாலம் கோவிலில் பூத்துக் குலுங்கியது உத்தால மலர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2022 11:04
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் கைகூடும். இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக கைலாயத்தில் இருந்து வந்த போது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்துள்ளது. திருக்கல்யாணம் முடிந்து சுவாமி, அம்பாள் கைலாயம் செல்லும் போது சுவாமி இத்தளத்தில் உத்தால மரத்தையும், தனது பாதரட்சையையும் விட்டுச் சென்றதாக வரலாறு கூறுகிறது. 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது. இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசியிலும், சித்திரைமாத முதல் வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம். இவ்வாண்டு நேற்று இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்த்து தரிசித்து சென்றனர். இந்த உத்தாலம் மலர் ஐந்து விதமான இதழ்களையும், ஐந்து வகையான சுவையையும் உடையது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் மனிதர்கள் உண்ண உகந்தது. இந்த உத்தால மரம் உலகில் வேறு எங்கும் இல்லாதது தனிச் சிறப்பு வாய்ந்தது.