பதிவு செய்த நாள்
13
ஏப்
2022
11:04
காஞ்சிபுரம்: நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணோம் என போலீசில் புகார் கொடுத்து கலாய்ப்பார். அதேபோல, ஒரு கோவிலையே காணோம் என, ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த கோபி கூறியதாவது: காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் நமச்சிவாயம் டயர் கம்பெனிக்கு நண்பர் சென்றுள்ளார். உள்ளே கோவில் போன்ற அமைப்பு தென்பட்டிருக்கிறது. அதைபார்த்தபோது அங்கே சிவலிங்கம் மற்றும் நந்தி இருந்துள்ளன. பலநுாறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் போல காணப்பட்டது. முழுதும் சிதிலமடைந்திருந்தது. அதை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பினார்.
பின்னர் காஞ்சிபுரம் சென்றநான், அந்த கடைக்கு உள்ளே சென்று பார்க்க அனுமதி கோரினேன்; மறுத்தனர். போலீசுக்கு போவேன் என்றதும் மிரண்டனர். உள்ளே இருந்தது, பழமையான சிவன் கோவில்; மண்டபங்கள் இடிந்திருந்தன. புகைப்படம், வீடியோ எடுத்தேன். அறநிலைய துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் ஜெயராமன், துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தேன். கோவிலை ஆக்கிரமித்து டயர் கடை நடைத்தும் நமச்சிவாயத்திடம் விசாரித்தேன். கோவில் இடம் எங்கள் மூதாதையர் உடையது. அங்கே சித்தர் ஒருவர் ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அவரை போற்றும் வகையில் அங்கே கோவில் அமைக்கப்பட்டது. சித்தர் சமாதியில் நந்தி, லிங்கம் அமைப்பது வாடிக்கை.காலப்போக்கில் அது பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்தது. இது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன் வழக்கு நடந்தது. அதன் அடிப்படையில் அங்கு டயர் கடை நடத்தி வருகிறேன். இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றார்.
அந்த கோவில் தொடர்பாக அறநிலைய துறை அமைச்சர், அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். கோவில் சம்பந்தமாக, எவ்வித ஆதாரங்களும் இல்லை என, கூறியுள்ளனர்.இந்த விஷயத்தில், தமிழக அரசு என்ன செய்ய போகிறது என்பதை பார்க்க வேண்டும். அங்கிருக்கும் சிவன் கோவிலை புதுப்பித்துமக்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில்சிவ பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவேன். ஆவணங்களுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துகோவிலை மீட்டெடுக்கபோராடுவேன், என்றார்.
ஆதாரங்கள் எதுவும் இல்லை: ஹிந்து அறநிலைய துறைஇணை ஆணையர் ஜெயராமன் கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளுக்கு முன், அந்த பகுதியில் இருந்த சித்தர் ஒருவர் அங்கே ஜீவசமாதி ஆகியுள்ளார். அதை வைத்து ஒரு கோவில் போல அமைத்துள்ளனர். கோவிலுக்குள் லிங்கமும், நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் மட்டுமே, கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதித்துஉள்ளனர்.தனியார் கட்டமைப்பின் கீழ் நிர்வகிக்கப் பட்ட இடம் என்பதால், கோவிலை நினைத்த நேரத்தில் மூடி திறந்துள்ளனர். அதனால், பக்தர்கள் நடமாட்டம் இல்லை. ஒரு கட்டத்தில் கோவிலை தன் வியாபாரத்துக்கு நமச்சிவாயம் பயன்படுத்தியுள்ளார். அங்கே டயர்விற்பனை கடை அமைத்திருக்கிறார். அறிநிலைய துறையிடம், அந்த இடம் சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் இல்லை. இருந்தபோதும், பிரச்னை என கிளம்பி விட்டதால், ஆவணங்களை தேடுகிறோம். நமச்சிவாயத்தை அழைத்து விசாரிப்போம். ஆதாரம் கிடைத்தால், இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.