பதிவு செய்த நாள்
23
ஜூலை
2012
10:07
தென்காசி: தென்காசி மேலசங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட மேலசங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று காலை 6.10 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் கொடிமரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகமும், சிறப்பு அலங்கார, தீபாராதனையும் நடந்தது. கோமதி அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இன்று (23ம் தேதி) காமதேனு வாகனத்திலும், 24ம் தேதி சிம்ம வாகனத்திலும், 25ம் தேதி ரிஷப வாகனத்திலும், 26ம் தேதி பூங்கோயில் வாகனத்திலும், 27ம் தேதி அன்ன வாகனத்திலும், 28ம் தேதி புஷ்ப பல்லக்கிலும், 29ம் தேதி கிளி வாகனத்திலும், 30ம் தேதி கனக பல்லக்கிலும், 31ம் தேதி ரிஷப வாகனத்திலும் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 11ம் நாளான ஆகஸ்ட் 1ம் தேதி காலையில் அம்பாள் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 5.40 மணிக்கு மேல் 6.40 மணிக்குள் தெற்குரத வீதியில் கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் தபசு காட்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருவீதிஉலா வருதலும், இரவு காட்சியும் நடக்கிறது. 2ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.