பிரான்மலையில் வள்ளல் பாரிவிழா: வேட்டைக்குச் சென்று திரும்பும் பாரம்பரிய நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2022 03:04
பிரான்மலை: பிரான்மலையில் பாரிமன்னர் வேட்டைக்குச் சென்று திரும்பும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது.
பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியதும், கடையெழு வள்ளல்களில் முதல் சிறப்புக்குரிய மன்னன் வள்ளல் பாரி ஆண்டதுமான பிரான்மலைக்கு பறம்புமலை, திருக்கொடுங்குன்றம் என்ற பெயர்கள் உண்டு. இங்குள்ள குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை திருவிழாவின் ஏழாம் திருவிழா அன்று மன்னர் பாரியை சிறப்பிக்கும் விதமாக வள்ளல் பாரிவிழா நடத்தப்படும். இன்று திருவிழாவின் ஒரு பகுதியாக இவ்விழா நடந்தது. தேரில் வள்ளல் பாரி வேட்டைக்கு சென்றார். வேட்டை முடிந்து வரும் வழியில் கொழுகொம்பு இல்லாமல் தவித்த முல்லைக்கொடிக்கு தனது தேரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முல்லை கொடியை எடுத்து பாரியின் தேரில் படர விட்டார். தொடர்ந்து படியளக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அரிசி வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பாரி விழா பட்டிமன்றம் கருத்தரங்கம் வழக்காடுமன்றம் என விமரிசையாக நடத்தப்பட்டு தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. தற்போது சில வருடங்களாக அவை நடக்கவில்லை. எனவே வரும் ஆண்டுகளில் பாரி விழாவை விமரிசையாக நடத்த பக்தர்களும் தமிழ் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.