பதிவு செய்த நாள்
15
ஏப்
2022
09:04
ராமேஸ்வரம் :நடப்பாண்டு தமிழகத்தில் ஏழு அதிதீவிர புயல்கள் உருவாகி கனமழை பெய்து, வெள்ளத்தில் மிதக்கும் என ராமேஸ்வரம்கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டான நேற்று, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில், கோவில் குருக்கள் உதயகுமார், ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:வரும் அக்., முதல் டிச., வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி 12 பலவீனமாகி, ஏழு அதிதீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், நாகையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இதனால், விவசாயம் பாதித்தாலும் தென்னை, மா, பலா, வாழை விளைச்சல் நன்றாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை மேலும் உச்சத்தை தொடும். கோவில் நகைகளை அரசு உருக்கி கருவூலத்தில் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகும்.சில அரசியல் தலைவர்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை, புதிய தொழிலில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திப்பர். மேலும் இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் உருவாகக் கூடும். நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு சீனா, பாகிஸ்தான் பொறாமையில் பல சூழ்ச்சிகள் செய்யும். பின், அது பயனின்றி போகும். எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும்.வெட்டுக்கிளிகளால் கோதுமை பயிர் நாசமாகும். மின்காந்த அலைகளால் மொபைல் போன் டவர் சேதமாகும். இந்திய கடல் வழியாக செல்லும் ஒரு வெளிநாட்டு சரக்கு கப்பல் நள்ளிரவில் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது. புதிய வைரஸ் பரவி, மக்கள் காய்ச்சலில் பாதிக்கப்படுவர்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.