பதிவு செய்த நாள்
24
ஜூலை
2012
10:07
ராசிபுரம்: சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, புனிதரின் ஆசீர் பெற்றனர். ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் யூனியன், மதியம்பட்டி சவுரிபாளையத்தில், புனித மரிய மதலேனாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் ஆடி முதல் வாரத்தில், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இத்தேர்த்திருவிழாவில், பேய் ஓட்டும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. அதில், தமிழகம் மட்டும் அல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். முதல் இரண்டு நாட்கள் விசேஷ ஆராதனைகள், ஜெபவழிபாடு, நவநாள் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாம் நாள், பெரிய தேருடன் நான்கு தேர்கள் கோவிலை சுற்றி இழுத்துவரப்பட்டது. பேய் ஓட்டும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் என பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என, புனிதரிடம் பிரார்த்தனை செய்வதற்காக வந்திருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை, திருப்பலியும், 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலியும் நடந்தது. இரவு 10 மணிக்கு பெரிய தேருடன், நான்கு சிறிய தேர்கள் பவனி வந்தது. தேரின் முன் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என பலரும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையிலும், பேயின் பிடியில் இருந்து பாதுகாக்கவும் வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தியபடி வலம் வந்தனர். தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, புனிதரின் ஆசீர் பெற்றுச் சென்றனர்.