திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று கோபுர , விமானங்களுக்கு சிறப்பு மகாதீபாராதனை நடந்தது.
குரு தலமான பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த ஏப்.10 ல் குருப்பெயர்ச்சி யாகம் நடந்தது. நேற்று அதிகாலை 4:16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதனை முன்னிட்டு நேற்று குருப்பெயர்ச்சி நடந்தவுடன் ராஜகோபுரத்திற்கும், மூலவர் விமானத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதிகாலை முதல் வந்திருந்த பக்தர்கள் தீபாராதனையை தரிசித்தனர். தொடர்ந்து மூலவர் சந்தனக்காப்பில் வெள்ளிக்கவசம் அணிந்து அருள்பாலித்தார். உற்ஸவர் சர்வ அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலர் வீரப்பன் செட்டியார் செய்தார்.