பதிவு செய்த நாள்
24
ஜூலை
2012
10:07
நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் ஏழைகளுக்கு உதவும் இரக்க குணம் கொண்டவர்களாயினும் உழைக்க முடிந்த ஒருவன் யாசகம் பெற்று சோம்பேறியாவதை விரும்பவில்லை. ஒருசமயம், நபிகள் அவர்களிடம் வந்த ஒருவர், தனக்கு உதவுமாறு கேட்டார். அவரிடம், ""உம்மிடம் உடமைகள் ஏதாவது உள்ளதா? என்று நாயகம்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ""என்னிடம் தண்ணீர் கிண்ணம் ஒன்றும், படுக்கை விரிப்பும் தான் உள்ளன.வேறு எதுவுமில்லை, என்று அவர் பதிலளித்தார். அவை இரண்டையும் கொண்டுவரும்படி அவர்கள் உத்தரவிட்டார்கள். ""இவற்றை வாங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று தங்கள் தோழர்களை நோக்கிக் கேட்டார்கள். அதற்கு ஒருவர், இரண்டு திர்ஹம் தருவதாகச் சொன்னார். அவருக்கு நபிகளார் அந்தப் பொருட்களை விற்றுவிட்டார்கள். பின்னர் அந்த மனிதரிடம், ""இந்தாரும் இரண்டு திர்ஹம்கள். இதில் ஒரு திர்ஹமுக்கு உமக்கு உணவு வாங்கிக்கொள்ளும். இன்னொரு திர்ஹமுக்கு ஒரு துண்டுக்கயிறு வாங்கிக்கொள்ளும். காட்டுக்குச் சென்று விறகு சேகரித்து வந்து கடைத்தெருவில் விற்பனை செய்யும், என்று கூறி அனுப்பினார்கள். 15 நாட்களுக்குப் பிறகு, அந்த மனிதர் நாயகம்(ஸல்) அவர்கள் முன்னால் வந்தார். அவர்கள் சொன்னபடி செய்ததாகவும், தற்போது தம்மிடம் பதினைந்து திர்ஹம்கள் மீதம் உள்ளதாகவும், அதைக்கொண்டு தேவையான கோதுமை, துணிமணி வாங்கப்போவதாகவும் தெரிவித்தார். நாயகம்(ஸல்) அவர்கள் அவரிடம், ""எது மிகவும் போற்றத்தக்கதும், அறிவுடைமையும் ஆகும்? இதுவா, யாசகம் கேட்ட முத்திரையுடன் மறுமைநாள் சென்றடைவதா? என்று கேட்டார்கள். உழைக்கும் திறனுடையவர்கள் இனியேனும் யாசகம் கேட்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26