பதிவு செய்த நாள்
24
ஜூலை
2012
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கரகோஷத்துடன் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு பதினாறு வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதியுலா நடந்தது. விழாவின் 5ம் நாளன்று காலை மங்களாசாசனம், ஐந்து கருட சேவை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு ஏகாந்த திருமஞ்சனம், அதை தொடர்ந்து ஆண்டாள்,ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளல் நடந்தது. இதன்பின், காலை 9 .05 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு ரதவீதிகள் சுற்றி வந்த தேரானது 12.30 க்கு நிலைக்கு வந்தது. பக்தர்கள் தேரில் ஏறி ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தனர். விழாவில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆனந்தன், ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் (பொறுப்பு) ராஜூ உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் செய்திருந்தனர்.