பதிவு செய்த நாள்
24
ஜூலை
2012
10:07
சென்னை: தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை நுழைவாயிலில், குங்குமம், மஞ்சள் மற்றும் உப்பைக் குவித்து, பொதுமக்கள் பூஜை செய்து வருகின்றனர். சென்னையில் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, அதிகரித்து உள்ளது. தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து, பலர் சிகிச்சைக்காக இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். இங்கு போதிய இடமின்மையால், பலர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
குங்கும குவியல்: தண்டையார்பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு, மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இதில், நோயாளிகள் தங்கி, சிகிச்சை பெறும் பகுதி நுழைவாயில் அருகே, பல இடங்களில் குங்குமம், மஞ்சள் மற்றும் உப்பையும் குவித்து, கற்பூரம் கொளுத்தி நோயாளிகளின் உறவினர்கள் பூஜை செய்கின்றனர்.
விஷமத்தனம்: இது விஷமத்தனமான பூஜை என, பலர் பீதியில் பயந்து ஓடுகின்றனர். இது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் கூறியதாவது: நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீட்டுக்கு செல்லுமுன், நுழைவாயில் அருகே, மீண்டும் இந்த மருத்துவமனைக்கு வரவேக் கூடாது என வேண்டி, குங்குமம், மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை குவித்து, கற்பூரம் ஏற்றி செல்கின்றனர். அதனருகே சென்றாலோ அல்லது அதை தாண்டி சென்றாலோ நோய் தாக்கும் என்ற பீதியிலே பலரும் ஓட்டம் பிடிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.