பதிவு செய்த நாள்
24
ஜூலை
2012
10:07
விக்கிரமசிங்கபுரம்: மழைவேண்டி காரையார் பாணதீர்த்த அருவியில் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ சுப்பையா தலைமையில் வருணஜெபம் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து அணையின் நீர்மட்டம் குறைவாக காணப்படுகிறது. இதனால் கார்சாகுபடி பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உருவாகி மாவட்டத்தில் கார் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. இது விவசாயிகளை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. மழை பெய்யும் என்று எதிர்பார்த்து நம்பிக்கை இழந்த விவசாயிகள் வருணஜெபம் நடத்த முடிவு செய்தனர். அம்பை எம்எல்ஏ சுப்பையா தலைமையில் நேற்று காரையார் பாணதீர்த்த அருவிக்கரையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயிலில் வருணஜெபம் நடந்தது. வருண ஜெபத்தை முன்னிட்டு கோயிலில் விநாயகருக்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து யமுனை, கோதாவரி, கங்கை, சிந்து, சரஸ்வதி, காவிரி, தாமிரபரணி ஆகிய சப்த நதிகளை வேண்டி தியானித்து பாணதீர்த்த அருவி தடாகத்தில் பால், மஞ்சள், சந்தனம், தேன், மாப்பொடி போன்ற பல்வேறு மூலிகை மற்றும் திரவியங்களும் அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. பின்னர் அம்பை எம்எல்ஏ சுப்பையா கும்பநீரை தாமிரபரணி நதியில் ஊற்றி மழை வேண்டி பிரார்த்தனை செய்தார். பூஜைகளை அம்பை சோமாஸ் கந்தசுவாமி, ரத்தினசபாபதி நடத்தினர்.
வருண ஜெபத்தில் நெல்லை தாமிரபரணி வடிநில கோட்டம் நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி செயற்பொறியாளர் மதனசுதாகரன், அம்பாசமுத்திரம் உதவி பொறியாளர் ராமையா, அதிமுக அம்பை ஒன்றிய செயலாளர் தாயப்பராஜா, மணிமுத்தாறு டவுன் பஞ்., தலைவர் சிவன்பாபு, விக்கிரமசிங்கபுரம் இசக்கிமுத்து, நகர செயலாளர் பாண்டியன், அம்பை நகராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் கருத்தப்பாண்டி, வீரவநல்லூர் பஞ்., தலைவர் பழனிச்சாமி, கூனியூர் பஞ்., தலைவர் இசக்கிபாண்டியன், மேலச்செவல் பஞ்., தலைவர் முருகேசன், சிவந்திபுரம் கிராம பஞ்., துணைத் தலைவர் பிராங்கிளின், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் பாபநாசம், ஆபிரகாம், கண்ணன், தவசி, டேவிட்டேனியல், சக்திவேல், பாசன உதவியாளர்கள் பிரம்மநாயகம், அருணாசலம், சிவந்திபுரம் நீர்பாசன கமிட்டி தலைவர் செல்வன், செயலாளர் ராமையா மற்றும் ஆறுமுகநயினார் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.