பதிவு செய்த நாள்
25
ஜூலை
2012
10:07
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, நேற்று பூச்சாட்டுதல் விழா நடந்தது.சேலத்தில் பிரஸித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. பூச்சாட்டுதல் விழாவை முன்னிட்டு, குலாலர் நடராஜர் கல்யாண மண்டபத்தில் இருந்து பக்தர்கள், கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பூக்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.பக்தர்கள் கொண்டு வந்த பூக்களை கொண்டு, அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாட்டனர். கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 31ம் தேதி கம்பம் நடுதலும், ஆகஸ்ட் 7ம் தேதி சக்திகரகம் அழைத்தல், 8ம் தேதி பொங்கல் விழாவும், உருள தண்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 12ம் தேதி சத்தாபரணம் மற்றும் 14ம் தேதி பால்குட ஊர்வலத்துடன் விழா முடிவடைகிறது.அதே போல், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலப்பட்டறை மாரியம்மன் கோவில், மந்தைமாரியம்மன் கோவில் உள்பட மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.