பதிவு செய்த நாள்
25
ஜூலை
2012
11:07
ஆரல்வாய்மொழி: முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயில் ஆடி கொடை விழாவையொட்டி யானைகள் பவனியும், பால்குடம் ஊர்வலமும் நடந்தது. ஆலுமூடு அம்மன் கோயில் கொடை விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சண்டி ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, வில்லிசை ஆகியன நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 6 மணிக்கு தோவாளை முருகன் கோயிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், அதை தொடர்ந்து சண்டி ஹோமம், 8 மணிக்கு ஆரல்வாய்மொழி திருவாவடுதுறை ஆதினத்திற்கு உட்பட்ட அகலிகை ஊற்று பிள்ளையார் கோயிலில் இருந்து அபிஷேக குடங்கள், கரக குடங்கள், யானைகள் பவனிவர, முளை பாத்தியுடன் பாத யாத்திரையாக பக்தர்கள் பஜனை பாடி ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை வழியாக திருநெல்வேலி செல்லும் ரோடு வழியாக கோயில் நோக்கி வருதல், 11 மணிக்கு பாயாச குளியல், அன்னதானம், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் அக்னி கலசம் எடுத்தல், இரவில் அலங்கார தீபாராதனை, பூ படைப்பு, ஊட்டு படைப்பு ஆகியன நடந்தது.
இன்று காலை 9 மணிக்கு மேள கச்சேரி, வில்லிசை, 11 மணிக்கு பொங்கல் வழிபாடு, தீபாராதனை, 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மாலை 4 மணிக்கு திருஷ்டி பூஜை, 5 மணிக்கு நடை சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆலமூடு அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரெகுராஜன், திலகவதி, நெடுஞசாலைத்துறை போக்குவரத்து போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழா ஏற்பாடுகளை முப்பந்தல் அருள்மிகு ஆலமூடு அம்மன் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அருணாசலம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.