பதிவு செய்த நாள்
29
ஏப்
2022
05:04
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் கோட்டை தர்ம முனிஸ்வரர் கோவில், சித்திரை விழா, ஏப்ரல் 21இல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக ஏப்ரல் 27 ல் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று, சாத்தமங்கலம் கிராம எல்லையில் இருந்து கோவிலுக்கு, பறவைக் காவடி, மயில் காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், ஊர்வலமாக சென்று, கோவில் முன்பு தீ மிதித்து, பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பூக்குழி உற்சவத்தை தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு சென்ற பால் மூலம், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சாத்தமங்கலம், கூட்டாம்புளி, வரவணி உட்பட, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.