வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 7:00 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர். மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டநிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக பக்தர்கள் இரவு தங்குவதை தவிர்த்து சுவாமி தரிசனம் செய்தவுடன் அடிவாரம் திரும்புமாறு வனத்துறையினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.