பதிவு செய்த நாள்
30
ஏப்
2022
05:04
காஞ்சிபுரம்:தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், அப்பர் மடம் தேர் திருவிழாவில், மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த, 11 பேரின் ஆத்மா சாந்தியடைய, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
இது குறித்து, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் மற்றும் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர் தெரிவித்திருப்பதாவது:தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், அப்பர் மடம் தேர் திருவிழாவின் போது, உயர் அழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த விபத்தில், முன்னாள் ராணுவ வீரர் கே.பிரதாப், எம்.மோகன், ஏ.அன்பழகன், அவரது மகன் ராகவன் உட்பட, மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களது ஆத்மா சாந்தியடைவதற்காக, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப்படி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இக்கோர விபத்தில் காயமடைந்த 13 பேர், விரைந்து குணமாக இறைவனை வேண்டி கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.