பதிவு செய்த நாள்
27
ஜூலை
2012
11:07
கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களபபூஜை வரும் 30ம் தேதி துவங்கி 12 நாட்கள் நடக்கிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடி களபபூஜை வரும் 30ம் தேதி துவங்குகிறது. அம்பாள் அவதரித்த ஆடிபூரம் நட்சத்திரத்தன்று தொடங்கும் களபபூஜை தொடர்ந்து 12 நாட்களும் அம்பாளை குளிர்விப்பதற்காக நடத்தப்படுகிறது. இப்பூஜையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 5 மணிக்கு அபிஷேகமும், 6.15க்கு தீபாராதனையும், 8 மணிக்கு ஸ்ரீபலியும், 8.15க்கு நிவேத்ய பூஜையும் நடக்கிறது. காலை 10 மணிக்கு எண்ணெய், தேன், பால், பன்னீர், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம், களபம் போன்ற பொருட்களால் அபிஷேகமும் செய்யப்படுகிறது. பின்னர் ஜவ்வாது, அக்தர், புனுகு, பச்சைகற்பூரம், பன்னீர், கோரோசனை போன்ற வானை திரவியங்களை ஒன்று கலந்து வெள்ளிகுடத்தில் நிரப்பி சிறப்புபூஜை செய்யப்படுகிறது. பின்னர் தந்திரி சங்கரநாராயணரூ அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30க்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், 8.15க்கு பல்லக்கில் அம்மன் எழுந்தருளி கோயில் வலம் வருதலும், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாளபூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. ஆடி களபபூஜையின் நிறைவு நாள் அதிலாச ஹோமத்துடன் நிறைவடைகிறது. ஆடி களபபூஜையை காண ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.