பதிவு செய்த நாள்
28
ஜூலை
2012
10:07
ராசிபுரம்: ஐந்தடி உயரமுள்ள, 1,250 கிலோ எடையில் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்ட வெண்கலமணி, ராசிபுரம் அடுத்த பட்டணம் பள்ளத்துக் கருப்பணார் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 57. அவர், காரைக்குடி பகுதியில் மட்டுமின்றி, நாமக்கல் முல்லை நகரிலும் கோவிலுக்கு தேவையான வெண்கல மணி, ஸ்வாமி விக்கிரகங்கள், வேல்கள், திருவாச்சி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனை பொருட்கள் தயாரிக்கும் வார்ப்பு பட்டறை நடத்தி வருகிறார். அதை, தனது குலத் தொழிலாக செய்து வரும் ராஜேந்திரனுடன், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ராசிபுரம் அடுத்த பட்டணம் பள்ளத்து கருப்பணார் கோவிலில், பிரம்மாண்டமான வெண்கலத்தாலான மணியை வைக்க, கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.அதன்படி, ஐந்தடி உயரம், நான்கடி அகலம், 1,250 கிலோ எடையில், மிகப்பிரம்மாண்டமான வெண்கல மணியை வடிவமைக்கும் பணி, ஐந்து மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. மணியின் உள்ளே இருக்கும் இரும்பு நாக்கின் அளவு மட்டுமே மூன்றடி நீளம். அதன் மதிப்பு, 22 லட்சம் ரூபாய்.இந்த வெண்கல மணி, 20 ஆடி உயரத்தி,ல் நான்கு இரும்பு ஆங்கிள் கொண்டு கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், சேத்தலை பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு, இதே அளவுள்ள வெண்கலமணியை, ராஜேந்திரன் வடிவமைத்து அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பக்தர்களின் நிதியுதவியுடன், திருப்பதி கோவிலுக்கு, 36 டன் எடையில், 16 அடி உயரம் கொண்ட கோவில் மணி வடிவமைத்து கொடுக்கும் முயற்சியில், ராஜேந்திரன் தற்போது ஈடுபட்டுள்ளார். அதற்கான பூஜை, ஆகஸ்டு 1ம் தேதி துவங்கப்படுகிறது.பள்ளத்து கருப்பணார் கோவிலில், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடக்கும். இரண்டாவது ஆண்டு சித்திரை மாதல் முதல் நாள் இரவு 10 மணிக்கு திருவிழா தொடங்கி, அதிகாலை 3 மணி வரை நடக்கிறது. விழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமிக்கு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி, மணி கட்டிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.